பைசா பெறாத விஷயங்களை சுண்டைக்காய் சமா சாரம் என அலட்சியப்படுத்திப் பேசுகிறோம். அளவில் சிறுத்தது என்பதைத் தவிர சுண்டைக்காயை இத்தகைய விஷயங்களுடன் ஒப்பிட வேறு காரணமே இருக்காது. அப்படி அலட்சியப் படுத்தக் கூடிய காய்கறி களில் ஒன்றல்ல சுண்டைக்காய். சுண்டைக்காய் மருத்துவம்!
கிருமிகளை அழிப்பதில் சுண்டைக்காய்க்கு நிகரே இல்லை எனலாம். உணவின் மூலம் நம் உடலுக்குள் சேர்கிற கிருமிகள் அமைதியாக உள்ளே பலவித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும். சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி, தினம் சிறிதளவை தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய் தொற்றும், அதன் விளைவால் உண்டாகிற அரிப்பும் குணமாகும். வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
சுண்டைக்காயைக் காய வைத்து வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு வறுத்து, சூடான சாதத்தில் பொடித்துச் சேர்த்து ஒரு கவளம் சாப்பிட, அஜீரணக் கோளாறுகள் குணமாகும். வாயுப்பிடிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும் என்பது பெண்கள் கவனிக்க வேண்டிய சேதி. பக்கவாதம் பாதித்தவர்களுக்குக் கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் என்கிறது பாட்டி வைத்தியக் குறிப்பு ஒன்று.
எப்படி சுத்தப்படுத்துவது?
காம்புடன் கூடிய பச்சை சுண்டைக்காய்களாகப் பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீக்கி, சுண்டைக்காய்களை லேசாகத் தட்டி, தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். பிறகு கைகளால் லேசாக அவற்றை அலசினால், விதைகள் அடியில் தங்கும். விதைகளை முழுக்க நீக்கத் தேவையில்லை. பிறகு இன்னொரு முறை காய்களைக் கழுவிவிட்டு, சமையலுக்கு உபயோகிக்கலாம்.
உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து, கொழுப்பைக் கரைப்பது வரை பெரிய பெரிய வேலைகளைச் செய்யக் கூடிய மாபெரும் மருத்துவக் குணங்களை உள்ளடக்கியது சின்னதான இந்த சுண்டைக்காய். இத்தனை சிறிய சுண்டைக்காயினுள் இவ்வளவு விஷயங்களா என மலைக்க வைக்கிறது, ஊட்டச்சத்து நிபுணரான ஹேமமாலினி சொல்கிற தகவல்கள்...
* நமது வீட்டுத் தோட்டங்களில் மிகச் சுலபமாகவும் சீக்கிரமாகவும் விளையக்கூடிய ஒரு தாவரம் சுண்டைச்செடி. மகத்தான மருத்துவக் குணங்கள் கொண்ட சுண்டைக்காயின் உபயோகம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துகளின் பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம். தேவையற்ற செல் பாதிப்புகள் நம் உடலில் ஏகப்பட்டவியாதிகளை வரவழைத்து விடும். நீரிழிவு, இதய நோய்கள் என எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும். நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் அவசியம். வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி, இ போன்ற சத்துகளை எக்கச்சக்கமாக உள்ளடக்கியது இது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான தேவையான வைட்டமின் சியை அபரிமிதமாகக் கொண்டது சுண்டைக்காய். ஆரஞ்சு, கொய்யா, பப்பாளிக்கு இணையான வைட்டமின் சி இதில் உண்டு.
* ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்துப் போராடக் கூடியது. இரும்புச் சத்து என்றதும் கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோர்க்கு, அது சுண்டைக்காயில் அதிகளவில் உள்ளது தெரியாது.
* சுண்டைக்காயை பச்சையாகவோ, வற்றலாகவோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன், காயங்களும் புண்களும் கூட ஆறும்.
* தையாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் போன்ற பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அனைத்தும் இதில் உள்ளன. இதில் உள்ள ரிபோஃப்ளேவின் வாய் புண்களையும், சொத்தைப் பல் உருவாவ தையும் தடுக்கக் கூடியது.
* நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கக்கூடியது சுண்டைக்காய். பார்வைத் திறன் அதிகரிக்கவும் நினைவாற்றல் கூடவும் சுண்டைக்காயில் உள்ள நல்ல குணங்கள் உதவக்கூடியவை.
* நம்மூர் மக்களுக்கு சுண்டைக்காய் வற்றலைத் தவிர அதை எப்படி உபயோகிப்பது என்பது தெரியாது. ஆனால், சுண்டைக்காயை விதம் விதமாக சமைத்து உண்ணலாம். கத்தரிக்காயை என்னவெல்லாம் செய்து சாப்பிடுவோமோ, அத்தனையையும் சுண்டைக்காயிலும் செய்யலாம். கேரட், பீட்ரூட் மாதிரி பிரமாதமான சுவை கொண்டதல்ல இது. சப்பென்றுதான் இருக்கும். ஆனால், அதை நாம் சமைக்கிற முறையின் மூலம் சுவை மிக்கதாக மாற்ற முடியும்.
* சித்த மருத்துவத்தில் சுண்டைக்காயின் பயன் பாடு மிக அதிகம். அதன் சாரத்தை அவர்கள் பல மருந்துத் தயாரிப்புகளுக்கு உபயோகிக்கிறார்கள்.
* பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக அங்காயப் பொடி என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமாக சேர்க்கப்படுவதே சுண்டைக்காய்தான். தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது அதில் சேர்க்கப்படுகிற சுண்டைக்காய். “சுண்டைக்காயா... அதை வச்சு என்ன செய்ய என ஒதுங்கிப் போகாமல் இனிமேல் எப்போது, எங்கே சுண்டைக்காயைப் பார்த்தாலும் உடனே வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்” என்கிற ஹேமமாலினி, சுண்டைக்காயில் 3 சூப்பர் ரெசிபிகளையும் செய்து காட்டுகிறார். சுண்டைக்காய் அடை
என்னென்ன தேவை? கொள்ளு மாவு 50 கிராம், கம்பு மாவு 50 கிராம், சுண்டைக்காய் 75 கிராம், வெங்காயம் 50 கிராம், பச்சை மிளகாய் 3, எண்ணெய் 10 மி.லி., புதினா சிறிது, உப்பு தேவைக்கேற்ப, சீரகம் கால் டீஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
எப்படிச் செய்வது?
கடாயில் கொள்ளை வறுத்து அரைத்துத் தனியே வைக்கவும். பிறகு மறுபடி கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், சோம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வதக்கவும். சுண்டைக்காயைத் தட்டி அதில் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். பிறகு அதில் கொள்ளு மாவையும் கம்பு மாவையும் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, அரிந்த புதினா சேர்த்து அடை மாவு பதத்துக்குக் கரைத்து, சூடான தோசைக் கல்லில் அடையாக வார்க்கவும்.
சுண்டைக்காய் ரோல் என்னென்ன தேவை?
மல்டிகிரெயின் சப்பாத்தி 2, சுண்டைக்காய் 75 கிராம், வெங்காயம் 50 கிராம், எண்ணெய் 10 மி.லி., உப்பு தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் 3, ஃபிளாக்ஸ் சீட் பவுடர் 1 டீஸ்பூன், பனீர் 50 கிராம், சீரகம் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது. எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஃபிளாக்ஸ் சீட் பவுடர் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வதக்கவும். சுண்டைக்காயும், உப்பும் சேர்த்து வதக்கவும். பிறகு பனீர் சேர்த்துக் கிளறி எடுத்துத் தனியே வைக்கவும். இந்தக் கலவையை சப்பாத்தியினுள் ஸ்டஃப் செய்து, சூடாகப் பரிமாறவும். கொள்ளு சுண்டைக்காய் மசாலா என்னென்ன தேவை?
கொள்ளு 50 கிராம், தக்காளி 50 கிராம், வெங்காயம் 50 கிராம், எண்ணெய் 10 மி.லி., பச்சை மிளகாய் 3, உப்பு தேவைக்கு, சுண்டைக்காய் 75 கிராம், கறிவேப்பிலை சிறிது, சீரகம் கால் டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கொள்ளை 6 மணி நேரம் ஊற வைத்து, பிரஷர் குக் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப்பொன்னிறத்துக்கு வதக்கவும். பிறகு தக்காளி சேர்க்கவும். சுண்டைக்காயும் உப்பும் சேர்த்து வேக விடவும். கடைசியாக வெந்த கொள்ளு சேர்த்து நன்கு வேகவிட்டு சூடாகப் பரிமாறவும்.
பாரம்பரிய ரெசிபி
சுண்டைக்காய் வத்தக் குழம்பு
என்னென்ன தேவை?
சுண்டைக்காய் வற்றல் 1 பிடி (சுமார் 10 கிராம்), சாம்பார் பொடி 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, புளி எலுமிச்சை அளவு, அரிசி மாவு 1 டீஸ்பூன். தாளிக்க: நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் 1/2 டீஸ்பூன், கடுகு 2 டீஸ்பூன், வெந்தயம் 1/2 டீஸ்பூன், கடலைப்பருப்பு அல்லது துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, கறிவேப்பிலை தேவைக்கு. எப்படிச் செய்வது?
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை அதே வரிசையில் ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். பின் சாம்பார் பொடியையும் போட்டு, அதே எண்ணெயில் வறுத்தபின் புளிக்கரைசலை விடவும். உப்பு, சுண்டைக்காய் வற்றல் சேர்க்கவும். நன்கு கொதித்தபின் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொதிக்க விடவும். கெட்டியான பின் இறக்கி வைத்து சூடான சாதம் மற்றும் சுட்ட அப்பளத்துடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment