Sunday, September 15, 2013

பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?


பிணியின்றி நீண்ட காலம் இன்பத்துடன் வாழ விரும்புகிறேன். என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்? மருந்துப் பொருட்களில் மிகவும் உயர்ந்த ஒரு பொருள் கடுக்காய். கடுக்காயில் மருத்துவ குணங்களுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய குணங்களும் நிரம்பியுள்ளன. சாதாரணமான இரண்டு கடுக்காய்களை அதனுள்ளே இருக்கக் கூடிய கொட்டையை நீக்கி, தோல் சதையுடன் கூடிய பகுதிக்குச் சம அளவு கரும்பு வெல்லம் கலந்து இரண்டையும் பற்களால் கடித்து தினமும் காலையில் உணவுக்கு முன் ஒரு வேளை மட்டும் சுவைத்துச் சாப்பிடலாம். வெல்லத்துக்குப் பதிலாக தேனும் கலந்து சாப்பிடலாம். கடுக்காயின் பாதி அளவு சுக்கு, கடுக்காயின் கால் பங்கு திப்பிலி, கடுக்காயின் கால் பங்கு இந்துப்பு என்ற அளவிலும் சாப்பிடலாம். இதில் சுக்கு - திப்பிலி - இந்துப்பு மூன்றையும் சூரணம் செய்து, சூரணம் செய்யாத கடுக்காய்த் தோலுடன் ஒன்றாகக் கலந்து கடித்துச் சாப்பிட்டால் பிணியின்றி இன்பத்துடன் நீண்டகாலம் வாழும் பாக்கியம் கிடைக்கும். பருவ காலங்களுக்குத் தகுந்தபடியும் மேற்குறிப்பிட்ட மருந்து சரக்குகளைக் கடுக்காயுடன் கலந்து சாப்பிட்டாலும் மேலும் பல நன்மைகளைப் பெறலாம். வாதம் எனும் உடல் தோஷம் மழைக்காலத்தில் இயற்கையாகவே கூடுவதால், காலையில் எழும்போது தசைப் பிடிப்பு, மூட்டு வலி, பூட்டுகளில் வீக்கம் வலி போன்றவை அதிகம் தென்படும். இரண்டு கடுக்காய் தோலுடன் இந்துப்பு சேர்த்துச் சாப்பிட்டால், இந்த உபாதைகள் நன்கு குறையும். பித்தம் எனும் தோஷம் மழைக்காலத்துக்கு அடுத்த பருவகாலமாகிய இலையுதிர்க் காலத்தில் உடலில் கூடுகிறது. இதனால் உடல் சூடு அதிகமாகி, வாய்ப்புண், கண்ணெரிச்சல், சிறுநீர் எரிச்சல், வியர்வை கூடுதல் போன்ற உபாதைகள் கூடும். பழுப்புச் சர்க்கரையுடன் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால், இந்த பித்த தோஷம் அமைதியாகிவிடும். முன் பனிக் காலத்தில் கபதோஷம் வளர்ந்து, தலை பாரம், தலைவலி, உடல் கனம், பசி மந்தம் போன்றவை தோன்றும். சுக்குப் பொடியுடன் கடுக்காய்த் தோல் சாப்பிட்டால் எல்லா உபாதைகளையும் தவிர்க்கலாம். கபம் உறையும். கடும்பனிக் காலத்தில் திப்பிலி பொடியுடனும், நெஞ்சிலிருந்து கபம் உருகி வயிற்றில் பசியைக் குறைக்கும், வசந்தகாலத்தில் தேனுடனும், கபம் வறண்டு போகும் கடும் கோடையில் வெல்லத்துடனும் கடுக்காய்த் தோலைச் சாப்பிடுவது உடலைப் பிணியின்றிக் காக்கும். சிறந்த பயனைத் தரும் என்று பிருந்த மாதவர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இதில் உணவுக் கட்டுப்பாடு என்றும் எதுவும் கிடையாது. தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள், ஜீரண உறுப்புகளைச் சார்ந்த நோய்கள் ஒன்றும் அணுகாது என்று அவர் மேலும் தெரிவிக்கிறார். துன்பத்தைத் தரும் சில பிணிகளாகிய பசியின்மை, வயிறு உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் போன்ற அஜீரண நோய் நிலைகளில் கடுக்காய் தோல் 9 கிராம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு வகைக்கு 3 கிராம் சேர்த்துச் சாப்பிட உகந்தது. இதில் திப்பிலியை மட்டும் லேசாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நான்கு சரக்குகளையும் ஒன்றாய் இடித்துத் துணியால் சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தண்ணீருடனோ, வெறும் தேனுடன் குழைத்தோ சாப்பிடலாம். வெறும் வெந்நீருடனும் சாப்பிடலாம். உடலில் பலம் வெகு நீண்ட காலம் குன்றாமல் நிலைத்திருக்க, சுமார் 2 கிராம் கடுக்காய்த் தோல் சிறு சிறு துண்டங்களாக்கி சுமார் 15 மி.லி. அளவு பசு நெய்யுடன் நன்றாகப் பொரித்து ஆறிய பிறகு அந்தக் கடுக்காய்த் தோலை கடித்துச் சாப்பிட்டு, அந்த நெய்யையும் உடனே குடித்தால் போதுமானது. கடுக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அகஸ்திய ரஸாயன லேஹ்யம், தசமூலஹரீதகீ லேஹ்யம், அபயாமிருத ரஸாயனம், திரிபலா சூரணம் போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகளை, ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு வந்தாலும், நீங்கள் கேட்ட கேள்விக்கான சிறந்த விடையாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment