Sunday, September 15, 2013

கடம்பு


கடம்பு இந்தியாவில் உள்ள தொன்மையான மரங்களில் முக்கியமானது... கடம்பு. இந்தியாவின் ஒற்றுமைக்கே இது ஓர் உதாரணமாகத் திகழ்கிறது என்றுகூட சொல்லலாம். ஆம்... தமிழ், இந்தி, சமஸ்கிருதம் என இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகளிலும் 'கடம்பு’ என்றே இது அழைக்கப்படுகிறது. 1977-ம் ஆண்டு இந்திய அரசால், அஞ்சல் தலையில் பொறிக்கப்பட்ட பெருமையுடையது இம்மரம். இதன் பலகையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கட்டிலில் படுத்தால்... அலுப்பு நீங்கி, சுகமான தூக்கம் வரும். அதனால்தான் நம் முன்னோர்கள், 'உடம்பை முறித்து கடம்பில் போடு’ என்று ஒரு சொலவடையைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். பறவைகளுக்கு பழங்களுக்காகவும், மனிதர்களுக்கு மருந்துக்காகவும் பயன்படுவதோடு, காகிதம், பென்சில், தீப்பெட்டி, தீக்குச்சி எனப் பல வகையான பொருட்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது, கடம்பு. பெரும்பாலும், ஆற்றோரங்களில் இந்த மரங்களை அதிகளவில் நட்டு வைத்தனர் நோய்க்கு மருந்தாகும் கடம்பு கடம்பின் இலைகள், கால்நடைகளுக்குத் தீவனமாக பயன்படுகின்றன. இதன் இலை மற்றும் பட்டைகளில் இருந்து காடமைன், ஐசோகாடமைன், கடம்பைன் போன்ற அல்கலாய்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கான மருந்து மற்றும் விஷ முறிவு மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் குளோரோஜெனிக் அமிலத்தில் ஈரல் பாதுகாப்புக்கான மருந்து இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் இலை... வாய் மற்றும் தொண்டைப் புண்ணுக்கு மருந்தாகவும்; பழங்கள்... வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகவும்; விதைகள்... விஷக்கடி, நீர்க்கட்டு போன்றவற்றுக்கு மருந்தாகவும்; பட்டை... உடல் பலவீனம், சூடு நோய், தசைப் பிடிப்பு, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. வேர், பட்டையில் இருந்து இயற்கைச் சாயம்; பூக்களைக் காய்ச்சி எடுக்கும் தைலத்தில் இருந்து வாசனைத் திரவியம் என பல பயன்பாடுகள் உள்ளன. இம்மரத்தின் பூக்கள் ஆரஞ்சு வண்ணத்தில் பூத்து அதிக நறுமணம் வீசுவதால்... தேனீக்களால் அதிகளவில் கவரப்படுகின்றன. அதனால், தேனி வளர்ப்புக்கு உதவுவதோடு மற்றப் பயிர்களின் மகசூலும் கூடுகிறது. இம்மரம் அதிக அளவில் இலைகளை மண்ணில் கொட்டுவதால், அங்கக கரிம வளத்தைக் கூட்ட உதவுகிறது.பயிராகவும் வளர்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment