Sunday, September 15, 2013

கண் நோய்க்கு செண்பகம்..!


கண் நோய்க்கு செண்பகம்..! கண்களில் உள்ள வெண்விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு நிறமாகத் தெரியும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் தாக்குதலாலும், “கஞ்சக்டிவா’ எனும் விழியடுக்கில் ஒவ்வாமை ஏற்பட்டு, உறுத்தலின் காரணமாக சிவப்பு நிறம் ஏற்படும். இதனால் கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது காற்றின் மூலமாகவும், கிருமித்தொற்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைத் தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது. வெயில் காலம் முடிந்து, குளிர் ஆரம்பிக்கும் போதும், கடும் மழை ஓய்ந்த பின்னும் இந்த கண்நோய் வேகமாக பரவுகிறது. சித்த மருத்துவத்தில் அதிமந்த நயனரோகம், அக்கரரோகம் என்றழைக்கப்படுகிறது. அக்கரரோகத்தில், நோய் வந்த சிலநாட்களில் தானாகவே குணமாகிவிடும் என்பதால் கண்களுக்கு ஓய்வும், சுத்தமான நீரில் கழுவுவதே ஆரம்ப சிகிச்சையாகும். நீரில் கிருமிநாசினி, ஆண்டிபயாடிக் மருந்துகளைச் சேர்த்து கண்களைக் கழுவலாம். ஒவ்வாமையை நீக்கி, நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது செண்பக பூக்கள். மைக்கேலியா செம்பகா என்ற தாவரவியல் பெயர்கொண்ட பெரிய செண்பக மரங்களின் பூக்களிலிருந்து, நுண்கிருமிகளை கொல்லும் கண்நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பூக்களில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின்கள் கிருமிநாசினியாக பயன்படுகின்றன. செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து, கலவையை கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். செண்பகப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம். இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் சிவப்பு மாறும்.

No comments:

Post a Comment