Saturday, March 8, 2014

உடற்செல்களுக்கு வலிமை தரும் கீரை

கீரை வகைகளில் முருங்கைக் கீரைக்கு தனி மவுசு உண்டு. 90 வகையான சத்துப்பொருட்களும், 46 வகை நோய் எதிர்ப்பு பொருட்களும் கொண்டது முருங்கைக் கீரை. ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது. முருங்கைக் கீரையின் சத்துக்களை பார்க்கலாம்... 

* முருங்கைக் கீரை குறைந்த ஆற்றல் வழங்கக்கூடியது. 100 கிராம் கீரையில் 64 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. 

* கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து கணிசமாக உள்ளது. 100 கிராம் கீரையில் 8.28 கிராம் கார்போஹைட்ரேட்டும், 2 கிராம் நார்ப்பொருளும், 1.4 கிராம் கொழுப்புச்சத்தும் உள்ளன. 

* புரதம் நிறைந்தது முருங்கைக் கீரை. 100 கிராம் கீரையில் 9.40 கிராம் புரதம் கிடைக்கிறது. மேலும் 78.66 கிராம் அளவில் நீர்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. 

* வைட்டமின்-ஏ, தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 47 சதவீதம் அதாவது 378 மைக்ரோ கிராம் காணப்படுகிறது. கண் பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமாகும். சரும பாதுகாப்பிலும் பங்கெடுக்கிறது. உலர்ந்த கீரையை விட பச்சைக் கீரையில் 10 மடங்கு அதிகமாக வைட்ட மின்-ஏ, கிடைக்கிறது. 

* பி-குழும வைட்டமின்களான தயாமின் (வைட்டமின் பி-1), ரிபோபிளேவின் (பி-2), நியாசின்(பி-3), பான்டோ தெனிக் அமிலம்(பி-5), வைட்டமின்-பி6, போலேட்(பி-9)ஆகியவையும் சராசரி அளவில் காணப்படுகிறது. கிராம் கீரை தினசரி உடலுக்குத் தேவையான வைட்டமின்-சியின் 67 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. அதாவது 40 மைக்ரோ கிராம் வைட்டமின்-சி உடலுக்கு கிடைக்கிறது. 

கிருமிகளின் நோய்த் தொற்றுகளில் இருந்தும், தீமை விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களிடம் இருந்தும் பாதுகாப்பு அளிக்கக்கூடியது வைட்டமின்-சி. ஆரஞ்சு பழத்தில் கிடைப்பதைப்போல 7 மடங்கு வைட்டமின்-சி கீரையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சளி, காய்ச்சலுக்கு எதிர்ப்பு சக்தி வழங்கக்கூடியது இது.  

* எலும்புகள், பற்களின் உறுதிக்கு துணைபுரியும் கால்சியம், 100 கிராம் கீரையில் 185 கிராம் என்ற அளவில் மிகுந்து காணப்படுகிறது. 

* தாது உப்புக்களான இரும்பு (31 சதவீதம்), மக்னீசியம் (41%), மாங்கனீசு (17%), பாஸ்பரஸ் (16%), பொட்டாசியம் (7%), சோடியம் (1%), துத்தநாகம் (6%) போன்றவையும் முருங்கைக் கீரையில் உள்ளன. துத்தநாகம் ரோம வளர்ச்சிக்கும், சருமத்தின் நன்மைக்கும் உதவக் கூடியது. இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கும். பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்குத் துணை நிற்கும். உடற்செல்களுக்கு வலிமையைத் தரக்கூடியது முருங்கைக் கீரை தாதுக்கள். 

* தினமும் 3 கிராம் முருங்கைக் கீரை தூள் சாப்பிட்டு வந்தால் வலிப்பு மற்றும் பல்வேறு டிஸ்ஸார்டர் பாதிப்புகள் ஏற்படாமல் எதிர்ப்பு சக்தி தரும்

இரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரை

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துப் பொருளாக மட்டுமில்லாமல் சமையல் பதார்த்தங்களிலும் வெந்தயக் கீரையின் பங்கு உண்டு. அதிலுள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா... 

* வெந்தயக் கீரைகள் ஈரபதமிக்க நிலங்களில் செழித்து வளரக் கூடியவை. இது பேப்பேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியியல் பெயர் 'ட்ரிகோனலீலா பியோநம் கிரேசியம்'. 

* வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்துப் பொருட்களை அதீத அளவில் கொண்டு உள்ளன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. 

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது. 

* 'வைட்டமின்-கே' சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு,பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன. 

* வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். 

* நிட்டானிக் அமிலம் இதில் உள்ளது. இது தலைமுடி உதிர்தல், தலைமுடி வலுவின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் திறன் பெற்றது. 

* உடலுக்கு கேடு விளைவிக்கும் கூடுதல் கொழுப்புப் பொருட்களை செரிக்க செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. 

* பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கச் செய்கிறது வெந்தயக்கீரை. குறிப்பாக கர்ப் பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கவும், பிரசவ கால நன்மைக்கும் இவை பெரிதும் உதவுகின்றன. 

* பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 

* வெந்தயக் கீரைகள் உணவு செரிமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உட்கொள்ளும் உணவினை சீராக செரிக்க செய்யவும், குடலில் தங்கியுள்ள ஆக்சிஜன் பிரீரேடிக்கல் நச்சுகளை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன. 

* கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.

Monday, March 3, 2014

சித்த மருத்துவ குறிப்புகள்

தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கு எண்ணெய்யில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி,  நெஞ்சுவலி முதலியன அகலும்.

இருமல் குணமாக: 
அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி  சர்க்கரை, பால் சேர்த்து குடித்தால் இருமல் குணமாகும்.

ஜலதோஷம்:
 ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டால்  குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக 
:கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான  நோய்கள் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக
:முசுமுசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட  ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க: 
தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு  சளிகட்டு நீங்கும்.

பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த 
:தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது.

காசம் இறைப்பு நீங்க :
கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும்.

தலைப்பாரம் குறைய :
 நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.

தும்மல் நிற்க 
:தூதுவளை பொடியை மிளகு பொடி அல்லது தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.

உடல் வலுப்பெற-ஓரிதழ் தாமரை

மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.
 
பொதுவாக மனிதர்களைத் தாக்கும் 4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும் முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல் இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.


இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.
நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. .
இந்த கட்டுரையில் ஓரிதழ் தாமரையின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தாமரை என்றவுடன் நீரில் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும். இதன் இலையை வாயில் வைத்து சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும்.


இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.
இதற்கு இரத்தின புருஷ் என்ற பெயரும் உண்டு.


உடல் வலுப்பெற


சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப நல்ல ஆரோக்கியமான உடல் அமைந்தால்தான் நாம் பிறந்ததின்பலனை அனுபவிக்க முடியும்.
சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை, நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் சில தீய பழக்கங்கள் குடிகொண்டு உடல் என்னும் கோவிலை நாசப்படுத்திவிடுகின்றன.


இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும். ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும். மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.
உடலில் உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.
சுரக்காய்ச்சலால் அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும்.


உடல் எடை குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது விந்து வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல் காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த தாதுவை மீட்கலாம்.
ஆண்கள் சிலருக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகளால் உடல் உறவில் நாட்டம் இன்றி இருப்பார்கள். இவர்கள் போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாந்துவிடுகின்றனர். சிலர் இதனை மறைத்துவைத்து மனவேதனைக்கு ஆளாகி விடுகின்றனர்.


இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை (இலை, தண்டு, வேர், பூ, காய்) நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்த வேண்டும். இவ்வாறு ஒருமண்டலம் தொடர்ந்து செய்துவந்தால் மேற்கண்ட பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். 

இளமை தரும் ஆரஞ்சு பழம்


உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம். சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.

இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.

பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்து ஆரஞ்சில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும். ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

மாத விலக்கு பிரச்சனை தீர மாதுளை பூ சாப்பிடுங்க

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு,  அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு  ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்  படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும்,  உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி,  வெப்பநோய் தீரும்.

மாதுளம்பழத் தோலின் பயன்கள்

மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் நன்கு மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில்  கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.