Friday, May 16, 2014

கோடைக்கு ஏற்ற பாசிப்பயறு

கோடைக்கு ஏற்ற பாசிப்பயறு

பயறு வகை உணவான பாசிப்பயறு பல்வேறு சத்துகளின் பெட்டகமாக உள்ளது. பண்டைய காலம் முதலே பாசிப்பயறு இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்பின்னர் தெற்கு சீனா போன்ற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

கடந்த நூற்றாண்டு களில்தான் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விளைவிக்கப்படுகிறது. பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளன. புரதம், கார்போஹைட்ரேட்டுடன், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. 

கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயறைக் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்குச் சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் பாசிப்பயறு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

வயிற்றுக் கோளாறு இருப்பவர்கள் பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம். சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயறு ஊற வைத்த தண்ணீரை அருந்தக் கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப் பயறு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது. 

மணத்தக்காளி கீரையோடு பாசிப்பயறையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசனவாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். 

பாசிப்பயறை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். பாசிப்பயறை வல்லாரைக் கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

No comments:

Post a Comment