Tuesday, February 11, 2014

சர்க்கரை நோயும், சிரிப்பும்!

நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். நகைச்சுவைக்காரர்களை மற்றவர்கள் விரும்புவது மட்டுமல்ல, அவர்களுக்கும், அவர்களால் சிரிக்க வைக்கப்படும் மற்றவர்களுக்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாக, நன்றாக வாய்விட்டுச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், நல்ல மனநிலையும் இருக்கும் என்பது பழைய தகவல். இப்போது, டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக மனம் விட்டுச் சிரித்தால், சாப்பாட்டுக்குப் பிறகு ஏறும் குளுக்கோஸ் அளவு மிக மிகக் குறைவாக இருக்கும் என்கிறார்கள்.

இந்த நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து மருத்துவர்கள் இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த ஆய்வில், ஒருநாள் சீரியசான விரிவுரையைக் கேட்க வைத்திருக்கிறார்கள். இன்னொரு நாள், நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் காமெடி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வைத்திருக்கிறார்கள்.

சீரியசான விரிவுரையைக் கேட்ட நாளைவிட, காமெடி நிகழ்ச்சியில் கலந்து வாய்விட்டுச் சிரித்த நாளில் குளுக்கோஸ் அளவு அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு குறைந்திருந்ததாம். சர்க்கரை நோய் என்கிறபோது எப்படி சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ, அதேபோல ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் சர்க்கரை நோய் தாக்கம் 44 சதவீத அளவுக்கு இருக்காது என்கிறார்கள். சர்க்கரை நோய் வந்தபின் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்த நோய் வரும்முன் காட்டினால் போதும்.

சர்க்கரை நோய் அண்டாமலே தடுத்துவிடலாம். சர்க்கரை நோயைத் தடுப்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னி பிரச்சினைகள் வராமல் காப்பதற்குச் சமம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment