Tuesday, October 14, 2014

முன்னோர் வழங்கிய மூலிகை: ஊசித்தகரை

நீள்வட்ட இலைகளையும் மஞ்சள் நிற பூக்களையும் நீண்ட காய்கள் உள்ள சிறு செடியினம். பார்ப்பதற்கு நிலக்கடலை செடி போல காட்சியளிக்கும். 50  கிராம் இலையை குறுக அரிந்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 250 மிலி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு 10 முதல் 15 மிலி வீதம்  காலை மாலை இரண்டு வேளையும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் பல் முளைக்கும் போது ஏற்படும் காய்ச்சல் தணியும்.இலையை நீர்விட்டு  மென்மையாய் அரைத்து களிபோல் கிளறி, சிறு தீயில் மீண்டும் கிளறி, இளம் சூட்டில் பற்று போட்டால் கட்டிகள், வாயு, நரம்பு பிடிப்பு, பல்வேறு  வீக்கம் போகும். 

ஊசித் தகரை வேரை எலுமிச்சை பழ சாற்றில் இழைத்து தடவ தேமல் படை ஆகியவை தீரும். விதையை புளித்த மோரில் அரைத்து  தடவ படை சிரங்கு மற்றும் ஆறாத புண் குணமாகும். இலையை இலைக்கள்ளி சாற்றில் ஊறவைத்து கொதி நீரில் அரைத்து போட்டால் தொழுநோய்  புண், புரையோடிய புண் படர் தாமரை, கட்டிகள் குணமாகும்.

வண்டு கடியுடனே வன்கடுவ னும் பலவாம்
பண்டு நமைப்புடையும் பண்டிதர்கள்- கண்டுரைக்கல்
பித்த அனலும் பெருத்த தகரை விதை 


நித்ரையுள் நில்லா திசை- என்கின்றது பழம்பாடல் ஊசித்தகரையின் சிறப்புகளை நமக்கு பறை சாற்றி நிற்கிறது. அனைவரும் வெறுக்கும் மணத்தை  கொண்ட இந்த தகரை செடி, நம்மை மற்றவர்கள் வெறுக்கும் படியான நோய் வந்தால் குணமாக்கி நலமுடன் வாழ வைக்கிறது என்றால் அதன்  சிறப்பை சொல்ல வார்த்தை ஏது? முன்னோர்கள் நமக்காக தேடி வழங்கிய, இத்தகைய மூலிகைகளை பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம். 

No comments:

Post a Comment