Sunday, December 22, 2013

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். இது காலம் காலமாக நடைப்பெறும் வழக்கம். ஆனால் இதை வருடத்துக்கு ஒரு முறை தான் கடைப்பிடிக்க வேண்டும் என்றில்லை. வாரம் ஒரு முறை தவறாமல் எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம் என்கிறார் தேனாம்பேட்டையில் உள்ள கெவின் கேர் நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் லட்சுமி தியாகராஜன். இதோ அவரது ஆலோசனை...

குழந்தை பருவத்தில் அம்மா தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவாங்க. ஆனால் வளர்ந்த பிறகு நாம் அதை மறந்து விடுகிறோம். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம் உடலுக்கு மட்டும் இல்லாமல் தலை முடியும் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெயில் கொழுப்பு சத்துள்ளது. இது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். நம் சருமத்தில் சின்ன துவாரங்கள் உள்ளன. எண்ணெயை தலை மற்றும் உடலில் தடவும் போது இவை சருமம் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் சருமம் மற்றும் தலைமுடி வறண்டு போகாமல் பளபளவென்று இருக்கும்.

ஆனால் சிலர் தலையில் எண்ணெய் வைப்பதால், தங்களின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவதாக கருதுகின்றனர். இதனால் அவர்கள் தலையில் எண்ணெய் வைப்பதை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் தலையில் எண்ணெய் வைக்காமல் இருந்தால், நாளடைவில் முடி வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு, முடி கொட்டுதல் போன்ற பிரச்னை ஏற்படும். தினமும் காலை எழுந்தவுடன் சிறிது எண்ணெய் தலையில் வைப்பது அவசியம். இந்த அவசர யுகத்தில் காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டு தலை குளிப்பது முடியாத காரியம்.

அதனால் ஷாம்பூவுக்கு மாறி விட்டனர். ஷாம்பு குளியலை விட சீயக்காய் குளியல் தான் சிறந்தது. அதனால் அந்த காலத்தில் தலைக்கு சீயக்காய் தேய்த்து குளிப்பது வழக்கமாக இருந்தது. சீயக்காய் பொடியில் எலுமிச்சை தோள், பச்சைபயிறு, வெந்தயம், செம்பருத்தி, துளசி, பூந்திக் கொட்டை போன்ற பல்வேறு மூலிகைகளை சேர்த்து அரைத்து அதை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

பொதுவாகவே சீயக்காய் குளியல் குளிக்கும் போது, தலையில் உள்ள எண்ணெய் அனைத்தும் போகாமல் இருக்கும். இது முடியை வறண்டு போகாமல் பாதுகாக்கும். மேலும் முடி பளபளவென்று இருக்கும். சீயக்காய் பொடியை பயன்படுத்துவதால், தலைமுடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், இருக்கும். இது முடியை பாதுகாப்பது மட்டும் இல்லாமல், உடலின் சூட்டை தணிக்கும். கண் எரிச்சலை போக்கி குளிர்ச்சியாக வைக்கும். எல்லாவற்றையும் விட மூளையின் சூட்டை தனித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

எண்ணெய் வைத்து தலை குளிக்கும் போது நல்ல தூக்கம் வரும். நல்ல தூக்கம் ஆரோக்கியமான வாழ்வுக்கு அஸ்திவாரம். இன்றை போட்டி நிறைந்த உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனஉளைச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். அதனை எண்ணெய் குளியல் போக்கும். எண்ணெயை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்யும் போது, ரத்த ஓட்டம் சீராகும், இறந்து போன அணுக்கள் வெளியேறி, ஆரோக்கிய அணுக்கள் உறுவாகும், பொடுகு பிரச்னை இருக்காது, இளநரை தோன்றது. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment